மார்க்சியம் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கும் மனித குலத்தின் உயரிய வாழ்வு நிலைக்கும் வழிகாட்டும் புரட்சிகர தத்துவமாகும் ஆனால் நவீன அடிப்படைவாதிகளும் தன்னுடைய குறுகிய தேசிய, இன நலன்களுக்கு ஏற்றவாறு மார்க்சியத்தை வெட்டியும் குறுகியும் பொருளுரைக்கும் புரட்டல்வாதிகளும் திருத்தல்வாதிகளும் மலிந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில்….
மார்க்சியத்தை மார்க்சியத்தின் பெயராலேயே குழப்பித் திரிக்கின்ற ஆய்வாளர்கள் மிகுந்து விட்ட தமிழக சூழலில், மார்க்சிய அடிப்படையிலான பல கருத்துகளை மையக்கருத்தை தெள்ளத்தெளிவாக புரிந்துக் கொள்ளவிட்டால்… நமது பணி….வீண்தானே.
ஆக முதலில் மார்க்சியத்தை புரிந்து கொள்வதற்கான அடிப்படையான இயக்கவியல் பொருள்முதல்வாதம் அதன் சார்ந்த கருத்துக்களை எப்படி காண்பது என்றே காண்போம்.
1).ஒரு பொருளை அல்லது ஒரு நிகழ்வை தனித்த ஒன்றாக காணாமல் அதை யானை இவற்றோடு இணைத்து ஒரு முழுமையின் பகுதியாகவும் பல்வேறு பொருள்களும் அல்லது நிகழ்வுகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் பாதிக்கப்படுவதாகவும் காணவேண்டும் .
2). எல்லா பொருள்களும் அல்லது நிகழ்வுகளும் எப்பொழுது இடையறாது இயங்கிக் கொண்டும் இயக்கப் போக்கில் இருக்கின்றன அவை மாறுகின்றன; வளர்கின்றன அல்லது சிதைகின்றன.
3). ஒரு பொருளில் அல்லது ஒரு நிகழ்வில் ஏற்படும் அளவு மாற்றங்கள் ஒரு குறிப்பிட்ட சூழலில் பண்பு மாற்றமாக உருப்பெற்று வேறொரு பொருளை அல்லது நிகழ்வை தோற்றுவிக்கும் .
4).எல்லா பொருள்களுக்குள்ளும் அல்லது நிகழ்வுகளுகுள்ளும் முரண்பாடுகள் இருந்து கொண்டே இருக்கும். இந்த முரண்பாடுகளுக்கு இடையில் ஒற்றுமையும் போராட்டமும் எப்பொழுதும் நடந்து கொண்டே இருக்கும் .
இதுதான் இயங்கியல் கண்ணோட்டம் .
பொருள் முதல்வாத கண்ணோட்டம் என்பது
1).உலகம் என்பது அதன் தன்மையிலேயே பொருளியலானது, பொருள்கள் நம் உணர்விற்கு அப்பாற்பட்டு புறவயமாக இயங்குகின்றன ,
2).பொருள்கள் முதன்மை வகைப்பட்டவை. கருத்துகள் சார்பானவை, அதாவது பொருள்கள் மனித எண்ணங்களின் சார்பின்றியும் இயங்க வல்லவை ஆகும், கருத்துக்கள் மனித மனதில் எதிரொலித்து படிமங்களாக உருப்பெறுபவை அவை பொருளின்றி இல்லை .
3).பொருளிலிருந்து உருவெடுத்த கருத்துக்கள் மீண்டும் பொருள்களை தாக்குகின்றன.
4). ஒரு பொருளைப் பற்றிய பரிபூரண அறிவு இன்றுவரை அறியப்படவில்லை எனினும் உலக பொருள்கள் அனைத்தும் அறியப்பட முடிந்தவையே. மாயை என்பதும் அறிய முடியாது என்பதும் இல்லை .