மார்க்சியம் என்றால் என்ன?
மார்க்சியம் என்றால் என்ன?

மார்க்சியம் என்றால் என்ன?

19 ம் நூற்றாண்டில் வாழ்ந்த கார்ல் மார்க்ஸ், தனது நண்பர் பிரெடெரிக் எங்கெல்ஸ் உடன் சேர்ந்து, உலகத்தையும், மனித சமூகத்தையும் ஆய்வு செய்து எழுதிய கோட்பாடுகள் மார்க்சியம் என்று அழைக்கப் படுகின்றன. மனித இனமானது மாற்றங்களை கண்டு வருவதையும், அந்த மாற்றங்கள் சில விதிகளுக்கு ஏற்றவாறு நடப்பதையும் கண்டறிந்தனர்.

சமூக விஞ்ஞான பாரவையுடன் மானிடவியல், மதங்கள், வரலாறு ஆகிய அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். இதன் காரணமாக மார்க்சியமும் ஒரு விஞ்ஞானம் ஆகும். அது ஒரு சித்தாந்தம் அல்ல. அதாவது முடிந்த முடிவு அல்ல.

விஞ்ஞானம் என்பது முழுமை பெறாத கோட்பாடுகளை கொண்டது. அதே மாதிரி மார்க்சியமும் முழுமை பெற்றதாக கருதப் பட முடியாதது. பிற்காலத்தில் வந்த அறிஞர்கள் தமது அனுபவங்களையும், ஆய்வுகளையும் சேர்த்துக் கொண்டனர். உதாரணத்திற்கு, லெனின், மாவோ ஆகியோர், மார்க்ஸ் சொல்லியிராத பல விடயங்களையும் இணைத்துக் கொண்டனர்.

மார்க்ஸ் தான் வாழ்ந்த காலத்தில் ஆதிக்கம் செலுத்திய, முதலாளித்துவத்தை பற்றி தீவிரமாக ஆய்வு செய்திருந்தார். இலாபம், கூலி போன்ற பல விடயங்களை வெறுமனே பொருளியல் ரீதியாக பார்க்காமல், அதில் வரலாறு, சமுதாயம் என்பன ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பதை ஆராய்ந்தார். அதன் விளைவாக தொழில் வழங்குனர்களும், தொழிலாளர்களும் பற்றிய தெளிவு கிடைத்தது.

மார்க்சியம் என்பது எந்த வித அங்கீகாரத்தையும், மதம் போன்றதொரு நம்பிக்கையையும் கோரவில்லை. அது உண்மைகளை நிறுவுவதை அடிப்படையாகக் கொண்ட விஞ்ஞானம் ஆகும். இன்றைக்கும் மனித இனத்தை பாதிக்கும் தீங்குகள், அவலங்களில் இருந்து மனிதர்களை விடுவித்து, சமுதாயத்தின் நாகரிக வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதை நோக்கமாகக் கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *