நான் இதற்க்கு முன் வைத்த விமர்சனமானது ஒரு கலையை எப்படி ரசிப்பது அதற்கான அளகோல் மற்றும் படம் பெயர் சம்பந்தமான விளக்கம் கொடுத்தேன் இந்த இணையத்தில் காணலாம் (https://ilakkaithedi.com/1666-2/) ஒவ்வொரு நபரும் அக்குறிப்பிட்ட கலையைப் பற்றிய அறிவு அனுபவத்தை முன்வைத்து பேசுவது அவரின் ரசனை மட்டம் அளவில் தன்மையும் வேறுபட்டு இருக்கும் என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.
மேலும் இப்பொழுது எழுதுவதன் நோக்கம் இன்று ஜெய்பீம் படத்தை தூக்கி நிறுத்தி கொண்டாடிக் கொண்டிருக்கும் இடதுசாரிகளின் அரசியல் வருமையை கருத்தில் கொண்டு எழுதும் கட்டாயத்தில் உள்ளேன்.
தங்களை மார்க்சியவாதிகளாகவும் முற்போக்குவாதிகளாகவும் காட்டிக் கொள்ளும் இவர்கள் எப்படி இந்த பின் நவீனத்துவ அடையாள அரசியலில் சிக்குண்டு கொண்டனர் என்பதனை தேடுவதே இந்தப் பதிவின் நோக்கம்.
அப்படியெனில் படத்தை பற்றி விமர்சனம் இல்லையா என்பவர்களுக்கு, அந்த இயக்குனர் தான் சொல்லிவிட்டாரே இந்த படம் முழுக்க கற்பனையானதே, படத்தில் பார்வதியின் ரோல் இல்லை, எக்ஸ்சட்ரா எக்ஸ்சட்ரா இப்படி இருக்கும் பொழுது (https://www.facebook.com/watch/?v=906975503267650)
நாம் இதனை பற்றி கேள்வி எழுபுவது ஏன்?
சூரியா பின்னால் போவோம், சூரிய தோழர் என்று ஆர்பரிக்கும் வசனங்களை தாங்கி வரும் இந்த சிவப்பு சித்தாந்தவாதிகள் அடையாள அரசியல் என்ற பின் நவீனத்துவ குப்பைக்குள் மூழ்கி சிக்கி திக்குமுக்காடுவதோடு தனது அணிகளையும் குழப்பி சந்தர்பவாத அரசியலில் வழி தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். இவர்கள் 1905க்கு முன் லெனின் சொன்ன அந்த திருத்தல்வாதிகள்தான் என்றால் 1956 க்கு பிறகு ரு.சோ.க.க.யின் 20 காங்கிரசில் கொண்டுவந்த மார்க்சியம் அல்லாத நவீன திருத்தல் வாதத்தை பிடித்துக் கொண்டுள்ள மார்க்சியத்தை மறுக்கும் மார்க்சிய வாதிகளாக உள்ள போது நாம் பேசுவது அவர்கள் புரிந்துக் கொள்வது கடினமே. அதற்காகத்தான் இவர்கள் சூரியா படத்தை ஆதரிப்பதும் இவர்கள் நிலைப்பாட்டை விமர்சிப்போரை எல்லோரையும் இவர்கள் முத்திரை குத்தும் பொழுது இவர்களின் அரசியல் கேள்விக் குறியாகிறது..
நான் தொடர்ந்து கேட்க்கும் கேள்விகளுக்கு அந்த தோழர்கள் பதிலளிக்காமலே கடந்து செல்லும் மெத்தன போக்கு என்ன எப்படி என்பதை விவாதிக்க வேண்டி உள்ளது.
முதலாளிதுவ வாதிகள் கூட copy right, royalty என்னும் பொழுது யாரின் கதையை பேசினாரோ அவருக்கான பங்களிப்பு செய்யும் பொழுது, இங்கே நீங்கள் பேசும் புரட்சியாளரி பங்களிப்பு என்ன?. சாதி வாதிகளை மத வாதிகளை அழைக்கும் தோலுரித்து காட்டி விட்டதாக பேசும் நீங்கள் ஏன் இவரின் கதையில் சொல்லப் பட்டுள்ளது போல் அந்த அம்மாவின் வீட்டை காட்டி இருக்கலாமே. அங்கே இவரின் முற்போக்கு எங்கே போய் ஒழிந்துக்கொண்டது? இப்படி கேள்விகள் அடுக்கிக் கொண்டே போகலாம் ஆனால் அவை சாரம்சத்தில் இவர்களின் பிழைப்புவாதத்தை சுட்டிக் காட்டும் அவ்வளுவே ஆனால் நமது நோக்கம் இன்று இந்த நிலைக்கு இந்த சிவப்பு சிந்தாந்தவாதிகளாக காட்டிக் கொள்ளும் இவர்களின் நிலைக்கு காரணம் என்ன ஏன் என்பதே தோழமைகளே.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது குருச்சேவ் தாக்கல்செய்த இருபதாவது பேராயத்தின் அறிக்கையில் மார்க்சிய-லெனினியத்தை நிராகரிக்கும் விதமாக சில கோட்பாட்டு வரையறைகளை முன்வைத்தார். அனைத்து மக்களுக்குமான கட்சி, அனைத்து மக்களுக்குமான அரசு ஆகிய முழக்கங்களோடு, கட்சி என்பது பாட்டாளிவர்க்கத்தின்
முன்னணிப்படை மற்றும் சுரண்டும் வர்க்கத்தின் மீதான பாட்டாளி
வர்க்க சர்வாதிகாரம் போன்ற கோட்பாடுகள் கைவிடப்பட்டன.
ஒடுக்கும் வர்க்கமான ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக புரட்சிகரமான போரை மேற்கொள்ளாமல் சோசலிசத்தை நோக்கிய மாற்றம் சாத்தியமல்ல என்ற மார்க்சிய-லெனினியக் கோட்பாட்டை குருசேவ் நிராகரித்தார். தற்போதுள்ள சூழலில் “பாராளுமன்றவாத வழிகளைப் பயன்படுத்தி அமைதியான வழியில் சோசலிசத்தை
நோக்கி முன்னேறுவது சாத்தியம்தான்” என்று கூறினார்.அதை வழி மொழிந்தனர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது. இந்திய கம்யுனிஸ்ட் கட்சித் தலைவர்கள் குருச்சேவின்
திரிபுவாதத்தை ஆர்வமாக வரவேற்றனர். ஏப்ரல் 1956-ல் கேரளாவில்
உள்ள பாலக்காட்டில் நடைபெற்ற சி.பி.ஐ.யின் நான்காவது
பேராயம் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது
பேராயத்தை “மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி” என்று
போற்றிப் புகழ்ந்தது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பேராயம்
குறித்த அறிக்கையைச் சமர்ப்பித்த அஜாய்கோஷ் மார்க்சிய –
லெனினியத்திற்கு முரணாக மேற்கொள்ளப்பட்ட இருபதாவது
பேராயத்தின் கோட்பாடுகள் அனைத்தையும் வரவேற்றார். அப்பட்டமான சந்தர்ப்பவாதத்தைப் பின்பற்றிய பெரும்பாலான சி.பி.ஐ. தலைவர்கள் எப்போதும் மார்க்சியவாதிகளாகவும்
இருந்ததில்லை, கம்யூனிஸ்டுகளாகவும் இருந்ததில்லை என்றால் மிகையன்று. சி.பி.ஐ-யின் திருத்தல்வாதத்தை எதிர்த்து சி.பி.ஐ.யிலிருந்து
பிளவுப்பட்ட பின்பும் கூட சி.பி.ஐ(எம்) தலைமை குருச்சேவின்
நவீன திருத்தல்வாதம் குறித்து ஒரு நிலைப்பாட்டை எடுக்க
மறுத்தது. மாபெரும் விவாதம் பற்றிய முடிவை 1968-ல் நடைபெற
உள்ள சிறப்பு மாநாட்டில் எடுப்பதாகக் கூறி தள்ளிப்போட்டது.
ஆனால் இக்கட்சி சோவியத் திருத்தல்வாதத்திற்கு அடிப்படையில்
எதிரான ஒன்று அல்ல என்பது 1968-ல் பர்துவான் சிறப்புக் கூட்டத்தில் நிரூபணமானது.
சி.பி.ஐ (எம்) கட்சியின் தலைமையானது உண்மையில் ஒரு
மையவாத நிலைப்பாட்டை எடுத்தது. இது வலது பாதையிலிருந்து
அடிப்படையில் வேறான ஒன்று அல்ல.
சர்வதேசப் பொதுவுடமை இயக்க வரலாற்றைப் பரிசீலிக்கும் போது ரஷ்யா, சீனாவிலுள்ள சோஷலிச அரசுகள் வீழ்த்தப்பட்டு பலம்வாய்ந்த ரஷ்ய, சீனக் கம்யூனிஸ்ட் கட்சிகளைக் கலைப்பதில் ஏகாதிபத்தியவாதிகள் வெற்றி பெற்றுவிட்டார்கள். ஆசிய ஆப்பிரிக்க நாடுகளிலுள்ள பலம் குன்றிய மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் குழுக்களைக் கலைப்பதில் வெற்றி பெற்றுள்ளார்கள்.
இந்தியாவில் போலி முதலாளித்துவ நாடாளுமன்றமுறை (நிறுவியிருப்பது) – ஏகாதிபத்தியத்துடனும் நிலப் பிரவத்துவத்துடனும் ஆயிரம் வழிகளில் பின்னிப் பிணைந்துள்ள (போலிப் பாராளுமன்ற முறை) நிறுவியிருப்பது திரிபுவாதிகளுக்கு கூடுதலான உதவியை வழங்கியுள்ளது.
கோர்பச்சேவ் கும்பலின் ரசியய கம்யூனிஸ்ட் கட்சி கலைக்கப் பட்டதன் தொடர்ச்சியாகவே மார்க்சியம் காலாவதியாகிவிட்டது என்றும், வரலாறு முடிந்துவிட்டது என்றும் பிரச்சாரம் செய்தது இங்குள்ள ஏகாதிபத்திய ஏஜெண்டுகள். ரஷ்யாவைத் தொடர்ந்து சீனாவிலும் ஏற்பட்ட முதலாளித்துவ மீட்சியைக் காரணம் காட்டி தனது மார்க்சிய விரோதக் கருத்துக்களை மெல்ல மெல்ல கொண்டுவந்தது. பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் தவறு என்றும், பாட்டாளி வர்க்கத் தத்துவமான இயக்கவியல் பொருள்முதல் வாதத்தையும் வரலாற்றுப் பொருள்முதல் வாதத்தையும் மறுத்ததோடு பாட்டளிவர்க்க சர்வாதிகாரத்தையும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்தனர்.
ஆரம்பத்தில் அவர்கள் மார்க்சியத்தின் குறை நிறைகளை இட்டு நிரப்புவது என்று பேசினர். மார்க்சியம் முழுவதும் தவறு என்று பேசவில்லை. மார்க்சியத்தைத் தாங்கள் எதிர்க்கவில்லை என்று அவர்கள் கூறியபோதிலும், மார்க்சியத்தின் தத்துவ அடிப்படையை பலவீனப்படுத்துவதற்கு அவர்கள் முயற்சி செய்தார்கள். மார்க்சிஸ்ட் என்ற முகமூடியுடன் நடமாடுவதை நிறுத்தவில்லை. கட்சியின் சாதாரண உறுப்பினர்களை ஏமாற்றுவதற்காகவே அவர்கள் இத்தகைய “விமர்சனங்களை” மேற் கொண்டனர். பின்னர் படிப்படியாக மார்க்சிய விரோதக் கருத்துக்களை முன்வைத்தனர்.
மார்க்சியத்தை எதிர்த்து ஃபூக்கோ, தெரிதா, ஃப்ராய்டு போன்றவர்களின் பின்நவீனத்துவக் கருத்துக்களை முன்வைத்தது இவர்கள். பின் நவீனத்துவத்துடன் பொருட்களை அறியமுடியாது என்ற அறியவொண்ணாவாதத்தையும் முன்வைத்தது. பின்நவீனத்துவத்தின் கட்டுடைத்தலின் சாரம் பின்வருமாறு கருத்தொருமிப்பா கூடவே கூடாது. அது வன்முறை அதிகாரத்திற்கே வழிவகுக்கும். அது ஆதிக்கத்திற்கு ஆதரவான கருத்தொருமிப்பானாலும் சரி, எதிரான கருத்தொருமிப்பானாலும் சரி, எதுவுமே வேண்டாம்.பகுத்தறிவே பயங்கரம். இந்தப் பகுத்தறிவால் வந்ததே அத்தனைக் கேடுகளும். தர்க்கமே வன்முறை. இந்தத் தர்க்கத்தினால் வந்ததே அத்தனைத் தொல்லைகளும். அறிவியலே வேண்டாம். இந்த அறிவியலால் நேர்ந்ததே அத்தனை இடர்ப்பாடுகளும். ஆகவே இது எதுவும் வேண்டாம். தனித்தனி.சமூகத்தின் மையச்சக்திகள் இருக்கிறார்களே, வரலாற்றின் உந்து சக்திகள், வரலாற்றை உருவாக்குகிற சக்திகள் அவற்றை ஒன்று திரட்ட வேண்டாமா? அவர்களை வைத்துதானே ஆதிக்கத்தை எதிர்க்கமுடியும். வேண்டாம், அவர்களைத் திரட்டுவது இன்னொரு வன்முறை அமைப்பையே உருவாக்கும். சரி, உதிரிகளையாவது திரட்டலாமா?. கூடாது எல்லாம் அவர்களே பார்த்துக் கொள்வார்கள்.சரி, அறிவு வேண்டாம், தருக்கம் வேண்டாம், கருத்தொருமிப்பு வேண்டாம், விதியொழுங்கு வேண்டாம், அறிவியல் வேண்டாம் அப்புறமெந்த நோக்கில் எதைவைத்து அமைப்புக் கட்டுவது என்றால் அமைப்பும் வேண்டாம். காரணம் அமைப்பு என்பதே அதிகாரமுடையது, ஆதிக்கத்தன்மை உடையது. அது ஆதிக்கத்தை ஆதரிக்கிற அமைப்பாயிருந்தாலும் சரி எதிர்க்கிற அமைப்பாயிருந்தாலும் சரி, அது வேண்டவே வேண்டாம்.தொழிலாளி வர்க்கத்திற்கு உள்ள ஒரே ஆயுதம் அமைப்பு மட்டுமே, அது சார்ந்த ஒற்றுமை மட்டுமே. அதுவும் வேண்டாம் என்றால், வேறு எதை வைத்துத்தான் ஆதிக்கத்தை எதிர்ப்பது? . சும்மா தனித்தனியாக எதிர்த்துக் கொண்டிருப்பதா? அப்படி எதிர்த்தால் ஆதிக்கம் எல்லோரையும் அழித்துவிடாதா என்றால் அதனாலென்ன செத்துத் தொலையுங்கள், வாழ்ந்து என்ன வாரிக் கொள்ளப் போகிறீர்களென்கிறது பின் நவீனத்துவம்.
இதுதான் பின் நவீனத்துவ அரசியலின் சாரம்.
பொதுவாக தத்துவங்கள் மனிதன் வாழ வழிகாட்டும் என்று சொல்வார்கள். ஆனால் பின்நவீனத்துவம் சாக வழிகாட்டும் தத்துவமாக இருக்கிறது என்பதே உண்மை.
பின்நவீனத்துவம் கட்டுடைத்தல் என்பதன் பேரால் எல்லாவற்றையும் கலைத்துபோட்டு மாற்று என எதையுமே உருவாக்காமல் விடுவது, வெறுமையை ஏற்படுத்த முயல்வது. இத்துடன் புதிதாக உருவாகும் எதையும் இதே கட்டுடைத்தல் என்கிற அணுகு முறையால் கலைத்துப்போட்டு மாற்று எதுவும் உருவாகவிடாமல் தடுப்பது. இதில் இரண்டாவது காரியத்தை மட்டுமே செய்துவருகிறது பின்நவீனத்துவம்.
பொருட்களின் சாரம், மொத்தத்துவம் போன்ற கருத்தாக்கங்களை பின் நவீனத்துவம் மறுத்தது. மொத்தத்துவம் என்பது எதேச்சதிகாரத்துக்கே வழிவகுக்கும் என்பதால் சிதறுண்டபோதலை ஆதரித்தது. மொத்தத்துவம், பொதுமைப்படுத்துதல் தரப் படுத்துதல் என்பதெல்லாம் தனித்துவமான அடையாளங்களை அழித்தொழிக்கும் வன்முறைகள் என்பதால் சிறு குழுக்கள், தனித்துவங்கள், தல அளவிலான செயல்பாடுகள் ஆகியவற்றை வரவேற்றதுடன் மொத்தத்துவத்தை அதாவது பேருரு அரசியலை எதிர்ப்பது என்ற பேரில் சோஷலிசத்தை எதிர்த்து சிற்றுரு அரசியலான “தலித்தியம், பெண்ணியத்தை” முன்வைத்தனர்.
நிறவாதம், சாதியம், மத அடிப்படைவாதம், பெண்ணடிமைத்தனம், சுற்றுபுறச் சூழல் அழிவு, தேசிய இனப் பிரச்சினை போன்றவைகளுக்கான தீர்வாக வர்க்கப் பார்வையற்ற நிலைப்பாடுகளை முன்வைத்தனர். வர்க்கப் போராட்டம் பற்றிய மார்க்சிய-லெனினிய அடிப்படை போதனைகளை எதிர்த்தனர்.
மார்க்சியத்துக்கு மாற்றாக பெரியாரியத்தையும் அம்பேத்காரியத்தையும் நிறுத்தினர். வர்க்கப் போராட்டத்திற்குப் பதிலாக தலித்தியத்தையும் அடையாள அரசியலையும் முன்வைத்தனர். இவ்வாறு கம்யூனிஸ்ட் கட்சியை ஒழிப்பதற்கும், எதிர்ப் புரட்சிகர இயக்கத்தைக் கட்டியமைக்கவும் இவர்கள் கட்சிகளை பிளவுபடுத்தினர். (நன்றி சமரன் நூல் கலைப்புவாதம்)