“சுரண்டும் வர்க்கங்களின் சித்தாந்தத்தை வன்மையாகப் பிரதிபலிக்கும் தோழர்கள் ஒரு சிலர் கட்சியில் இருந்து வருகின்றனர். இவர்கள் பரஸ்பர உதவி, ஒருமைப்பாடு என்னும் மனப்பான்மை கிஞ்சித்தும் இன்றி- கம்யூனிஸ்டுகள் உடைய- தொழிலாளி வர்க்கத்தின் உடைய மகத்தான மிகவும் நேர்மையான இந்த மனப்பான்மை கிஞ்சித்தும் இன்றி- பகைவர்களிடம் கையாளப்படும் முறைகளையே கட்சி உறுப்பினர்கள் சம்பந்தமாகவும் உள்கட்சி பிரச்சனைகள் சம்பந்தமாகவும் பல சந்தர்ப்பங்களிலும் கையாளுகின்றனர்.இத்தகைய சித்தாந்தத்தை உடையவர்கள் கட்சியில் தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ளவும், தங்களை வளர்ச்சி செய்து கொள்ளவும் விரும்பி அதன் பொருட்டு மற்றவர்களைப் பிடித்து கீழே இழுக்கின்றனர்.மற்றவர்களுடைய வளர்ச்சிக்கு இடைஞ்சலாக குறுக்கே நிற்கின்றனர். மற்றவர்களுடைய தலை மீது ஏறி தாண்டி சென்று விட விரும்புகின்றனர்.தங்களை விட அதிக திறமை காட்டுபவர்களைக் கண்டு பொறாமைப்படுகின்றனர். மற்றவர்கள் தங்களை விட அதிகமாக முன்னேறிச் செல்வதையோ அல்லது தங்களுடைய நிலைக்கு உயர்ந்து வந்து விடுவதையோ காணும் பொழுது அவர்கள் அதிருப்தி அடைகின்றனர். மற்றவர்களைக் கீழே இருத்தி வைப்பதில் அல்லது தங்களை விட பின்தங்கி இருக்கும் படி செய்வதில் வெற்றி பெற்றாலொழிய அவர்களுக்கு திருப்தி ஏற்படுவதில்லை. மற்றவர்களுக்கு கீழ் இருக்க அவர்கள் விரும்புவதில்லை. மற்றவர்களுடைய கஷ்டங்களைப் பற்றி அவர்கள் அக்கறை எடுத்துக் கொள்வதே இல்லை. அவர்கள் கவலைப்படுவதெல்லாம் தாங்கள் நன்றாக இருக்க வேண்டும், தாங்கள் வளர்ச்சி பெற வேண்டும் என்பதே. மற்ற தோழர்களுக்கு கஷ்டங்கள், தடங்கல்கள், மனச்சோர்வு அல்லது தாக்குதல்கள் ஏற்படுவதைக் காணும் பொழுது அவர்கள் இன்புறுகின்றனர்.ரகசியமாய் ஆனந்தப் பட்டுக் கொள்கின்றனர் .சிறிதும் அனுதாபம் இன்றி இருக்கின்றனர். மற்ற தோழர்களை கெடுத்துவிட வேண்டும் என்று கூட திட்டமிடுகின்றனர்.’கிணற்றுக்குள் விழுந்து தவிப்பவர்கள் மீது கல்லை விட்டெறிவதற்கு கூட துணிகின்றனர்’ மற்ற தோழர்களிடம் உள்ள பலவீனங்களையும் அவர்களுடைய கஷ்டங்களையும் பயன்படுத்திக்கொண்டு அவர்களை தாக்கி அவர்களுக்கு கெட்ட பெயர் வாங்கித் தருகின்றனர்.மேலும் கட்சிக்குள் இவர்கள் கட்சி ஸ்தாபனத்தின் பலவீனங்களைப் பயன்படுத்திக்கொண்டு தங்களுடைய சொந்த நோக்கங்களை பூர்த்தி செய்துகொள்ள முயலுகின்றனர். சொந்த முறையில் தங்களுக்கு லாபம் உண்டாகும் படி செய்து கொள்கின்றனர்.கட்சிக்குள் வதந்திகளைப் பரப்பி விடுவதிலும், மற்றவர்களைப்பற்றி முதுகிற்குப் பின்னிருந்து அவதூறு செய்வதிலும், தோழர்கள் இடையே நிலவும் உறவுகளை உடைத்து சிண்டு முடித்துவிடுவதிலும் இவர்களுக்கு அலாதியான பிரியம் உண்டு. கட்சிக்குள் நடைபெறும் கோட்பாடற்ற தகராறுகள் யாவற்றிலும் பங்கு எடுத்துக் கொள்வதற்கும், எல்லா ‘தர்க்கங்களிலும்’மிகுந்த அக்கறை காட்டுவதற்கும் விரும்புகின்றனர். குறிப்பாக,கட்சி மிகுந்த கஷ்டங்களுக்கு இடையே இருக்கும் பொழுது இவர்கள் கட்சிக்குள் இத்தகைய தாக்கங்களை உருவாக்குகின்றனர். அல்லது தீவிரமடையச் செய்கின்றனர் .சுருங்கக் கூறுமிடத்து,இவர்கள் மிகக் கொடியவர்கள்.கிஞ்சித்தும் நேர்மை இல்லாதவர்கள். இத்தகைய ஆட்கள் மார்க்சியம் -லெனினியத்தின் தத்துவத்தையும் வழிமுறையையும் கற்று பாண்டித்தியம் பெற முடியும், தொழிலாளி வர்க்க சித்தாந்தத்தை பிரதிபலிக்க முடியும் என்று கூறுவது நகைக்கத் தக்கதாகும்.இவர்களுடைய சித்தாந்தம் சுரண்டும் வர்க்கங்களுடைய சித்தாந்தத்தின் தத்ரூபமான பிரதிபிம்பம் என்பதில் சந்தேகமே இல்லை!”