உலக கம்யூனிஸ்ட் கட்சிகளின் மோதல்
சர்வதேச கம்யூனிஸ்ட்
இயக்கம் சோவியத் திருத்தல்வாதத்திற்கு எதிராக சமரசமின்றிப்
போராட வேண்டிய நிலைவந்தது. ஆனால் சோவியத் ரஷ்யாவில்
திருத்தல்வாதம் வெற்றி பெற்றதன் விளைவாக உலக அளவில்
கம்யூனிஸ்ட் கட்சிகளில் திருத்தல்வாதம் பலப்பட்டது. இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியிலும் திருத்தல்வாதம் பலப்பட்டது. திருத்தல்
வாதத்திற்கு எதிரான போராட்டம் உலக அளவிலும் இந்தியாவிலும்
கம்யூனிஸ்ட் கட்சிகளில் பிளவைக் கொண்டுவந்தது. மாசேதுங்
தலைமையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தொடுத்த திரிபுவாதத்திற்கு
எதிரான போராட்டத்தின் அடிப்படையில்தான் உலக கம்யூனிஸ்ட்
இயக்கம் பிளவுகளை சந்தித்தது.
ஏப்ரல் 1956-ல் கேரளாவில்
உள்ள பாலக்காட்டில் நடைபெற்ற சி.பி.ஐ.யின் நான்காவது
பேராயம் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது
பேராயத்தை “மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி” என்று
போற்றிப் புகழ்ந்தது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பேராயம்
குறித்த அறிக்கையைச் சமர்ப்பித்த அஜாய்கோஷ் மார்க்சிய –
லெனினியத்திற்கு முரணாக மேற்கொள்ளப்பட்ட இருபதாவது
பேராயத்தின் கோட்பாடுகள் அனைத்தையும் வரவேற்றார். அதில்
அவர் கூறியதாவது:
“இங்கு சில குறிப்பிட்ட பழைய கோட்பாடுகள் இயக்கங்களின்
வளர்ச்சிப் பாதையில் தடைக்கற்களாக இருந்துவருகின்றன.
தற்போதைய வரலாற்றுச் சூழலுக்குப் பொருந்தும் வகையிலும்,
வருகின்ற புதிய வரலாற்றுச் சூழலுக்குப் பொருந்தும் வகையிலும்
முன்னெப்போதையும்விட இயக்கத்தை விரைவாக எடுத்துச்
செல்வதற்கு ஏற்றவகையிலும் இருபதாவது மாநாடு சில பழைய
கோட்பாடுகளை மாற்றி புதிய கோட்பாடுகளை உருவாக்கியுள்ளது” என்று கூறி குருச்சேவின் திருத்தல்வாதத்தை ஆதரித்தார்.
பாலக்காடு பேராயத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசியல்
தீர்மானம் இந்தியா அரசியல் சுதந்திரம் அடைந்துவிட்டது என்பதை
பின் வருமாறு கூறியது:
“அமைதியையும், சுதந்திரத்தையும் பேணிக் காப்பதற்கான இறையாண்மை கொண்ட சுதந்திரக் குடியரசாக இந்தியா உருவெடுத்த நிகழ்ச்சியானது உலகில் பெரும் முக்கியத்துவம்வாய்ந்த கூறாக விளங்குகிறது” .
சி.பி.ஐ -யின் சிறப்புப் பேராயம் ஒன்று ஏப்ரல் 1958-ல்
அமிர்தசரசில் கூடியது. கட்சியின் அமைப்பு விதிகளில் பின்வரும்
நிலைபாடு சேர்க்கப்பட்டது: “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது
அமைதியான வழிகளில் முழுமையான ஜனநாயகத்தையும்
சோசலிசத்தையும் அமைப்பதற்குப் பாடுபடும்” என்று அந்தத்
திருத்தம் கூறியது.