இந்தியாவில் ‘கம்யூனிஸ்ட்’ கட்சி தொடங்கப்பட்டு 95 ஆண்டுகளாகிவிட்டன. இந்திய கம்யூனிச இயக்கமானது, வலது, இடது சந்தர்ப்பவாதங்களில் மாறி மாறி விழுந்து இந்தியப் புரட்சிக்குத் தொடர்ந்து துரோகமிழைத்துள்ளதை இந்த 95 ஆண்டு கால வரலாறு விளக்குவதோடு, எண்ணற்ற படிப்பினைகளையும் வழங்கியுள்ளது. ஒரு கம்யூனிஸ்ட் கட்சி எப்படி இருக்கக் கூடாது என்பதற்கான எதிர்மறை படிப்பினைகளாக இவற்றை எடுத்துக் கொண்டு, ஒரு சரியான, புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி உருவாவது காலத்தின் கட்டாயம்.(நன்றி வினவு)
நக்சல்பாரி எழுச்சிக்குப் பிறகு, திரிபுவாத – நவீன திரிபுவாதப் பாரம்பரியங்களை நிராகரித்து, உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) உதயமாகி, இந்திய கம்யூனிச இயக்கம் புரட்சிகரப் பாதையில் அடியெடுத்து வைத்தாலும், இடது சந்தர்ப்பவாதப் பாதையில் சறுக்கி விழுந்து பெரும் பின்னடைவையும் இழப்பையும் சந்தித்தது. இடது சந்தர்ப்பவாதத்தை நிராகரிப்பது என்ற பெயரில் மீண்டும் வலது சந்தர்ப்பவாதப் போக்குகள் தோன்றி மா-லெ கட்சி பிளவுபட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளபோதிலும், நாடு தழுவிய ஐக்கியப்பட்ட புரட்சிகர கட்சியாக வளரவில்லை