இந்தியாவின் அன்றைய நிலையை நோக்குவோமானால், ஒருபுறம் பிரிட்டிஷ் இந்தியாவில் முதலாளிய உறவுகள் அதிக வளர்ச்சி பெற்றவையாக இருந்தன, பெரும் முதலாளிகள் அய்க்கியப்பட்டு ஏகாதிபத்திய அரசுடன் பிணைக்கப்பட்டிருந்தனர். மற்றொரு புறம் பாட்டாளி வர்க்கம் உழைக்கும் வர்க்கத்துடன் நேச அணியை நிறுவ தவறியது.
இவ்வாறாக சீனாவை காட்டிலும் இங்கு எதிர்பரட்சி சக்திகள் கூடுதல் பலமும் புரட்சிகர சக்திகள் கூடுதல் பலவீனமும் பெற்றிருத்தன. இதன் விளைவாக தேசிய இயக்கத்தின் தலைமையை முதலாளி வர்க்கம் தக்க வைத்து கொண்டு நிலபிரபுத்துவம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றுடன் சமரசம் செய்து கொண்டது.
CPI க்குள் பிரதானமாக புரட்சியின் பாதை பற்றிய விவாதங்களே இருந்தது. புரட்சியை நடத்துவதற்கு தேவைப்படும் திட்டம், யுத்த தந்திரம் செயல் தந்திரம் பற்றிய புரிதல் இல்லை.
கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் எழும்பொழுது, அதை விவாத சுதந்திரம், செயல் ஒற்றுமை என்ற ஜனநாயக கோட்பாட்டின் அடிப்படையில் தீர்க்கப்படவே இல்லை.
கருத்து வேறுபாடுகள் மேலும் சிக்கலான பொழுது அரசியல் தலைமை குழுவான தோழர்கள் டாங்கே, ராஜேஸ்வர ராவ், பசவபுன்னையா அடங்கிய மூவர் குழுவை அனுப்பி சர்வதேச தலைமையான தோழர் ஸ்டாலினை சந்தித்தது.
சர்வதேச தலைமை பின்வரும் ஆலோசனைகளை முன் வைத்தது.
(1).சர்வதேச அளவில் நடைப்பெறும் தேசிய விடுதலை போராட்டங்களில் இருந்தும், சீன புரட்சியின் அனுபவங்களில் இருந்தும் படிப்பினை பெற வேண்டும்.
(2). பிரிட்டிஷ் அமெரிக்க ஏகாதிபத்தியங்களை ஆதரிக்கும் முதலாளிகள், நிலபிரபுக்களுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களை ஒன்றுபடுத்தி, சுதந்திரம், விடுதலை அடைவதற்கான பொதுவான அடிதளம் உருவாக்க வேண்டும்.
(3). இந்தியாவின் குறிப்பான நிலைமைகளுக்கு ஏற்றவாறு பாதை தீர்மானிக்க வேண்டும்.
(4). அது அமைதி பாதையாக இருக்காது.
இவைகளை கவனத்தில் எடுத்துக் கொண்டதாக வரலாற்று பக்கங்கள் சொல்லவில்லை என்பதே வருத்தமான விசியம்…
தொடரும்…