சிலம்பில் மாதவியை விலைக்கு விற்றல்
பெண்களைக் காலந்தோறும் அடிமையாக்கியதோடு மட்டுமல்லாமல், பெண்ணைப் பொருளாகப் பார்க்கக்கூடிய சமூகமாக ஆணாதிக்கச் சமூகம் இருந்தது. இதனை அறிந்த மார்க்சு பெண்ணை இன உற்பத்திக் கருவியாகவும், பொருளாகவும் பார்க்கக்கூடிய சமூகம் இது என்று கடுமையாக ஆணாதிக்கச் சமூகத்தைச் சாடுவார்.
பெண்ணைப் பொருளாகப் பார்க்கக்கூடிய நிலை சிலப்பதிகாரக் காப்பியத்தில் காணலாம்.
சிலப்பதிகார அரங்கேற்று காதையில் மாதவி என்பவள் தனது நடனக் கலையை சான்றோர்கள் கூடியிருக்கும் அவையில் அரங்கேற்றினாள்.
இலைப்பூங்கோதை, இயல்பினின் வழாஅமை
தலைக்கோல் எய்தித் தலை அரங்குஏறி
விதிமுறைக் கொள்கையின் ஆயிரத்து எண்கழஞ்சு
ஒரு முறையாகப் பெற்றனள்
(சிலம்பு
160-164)
புகார் நாட்டின் நடைமுறையான இயல்பினின்றும் வழுவாமல் அரசனின் பச்சை மாலையையும், தலைக்கோலி என்ற பெயரையும் மாதவி பெற்றனள். தலையரங்கிலே ஏறி ஆடிக்காட்டி நாடகக் கணிகையர்க்குத் தலைவரிசை என நூல்கள் விதித்த முறைமையின்படி ஆயிரத்து எட்டுக் கழஞ்சுப் பொன்னை ஒருநாள் முறையாகப் பெறுவள் என்ற தகைமையையும் அவள் பெற்றனள்.
நூறு பத்து அடுக்கி எட்டுக் கடை நிறுத்த
வீறு உயர் பசும்பொன் பெறுவது இம்மாலை
மாலை வாங்குநர் சாலும் நம் கொடிக்கு (சிலம்பு
165-167)
மாதவியின் நாட்டியக் கலையினைப் பாராட்டி அவருக்கு அளிக்கப்பட்ட மாலையினை யார் ஆயிரத்து எட்டுப் பொற்காசுகள் கொடுத்து வாங்குகிறார்களோ அவர்களுக்கு மாதவி மனைவியாவாள்.இது எப்படி இருக்கிறது என்றால் இன்றைய சூழலில் திருவிழாக்கள் நடைபெறும் நேரத்தில் ஒரு பொருள் வாங்கினால் மற்றொரு பொருள் இலவசம் என்பது போல் இருக்கிறது.பெண்ணைப் பெண்ணாகப் பார்க்காமல், பெண்ணை அடிமையாக்கி ஒரு பொருளாகப் பார்க்கக் கூடிய சமூகமாகச் சிலப்பதிகார காலச் சமூகம் இருந்திருக்கிறது.