‘அரசு’ என்பது எவ்வாறு தோற்றம்பெற்று வளர்ச்சியடைந்தது என்பதற்கு வெவ்வேறு கோட்பாடுகளின் மூலமாக பல்வேறு விளக்கங்கள் முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்றன. வரலாற்று வளர்ச்சியின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசு பற்றிய கோட்பாடு ஆளும் வர்க்கங்களுக்குச் சார்பானதாகவும் அத்தகைய வர்க்கங்களின் ஆட்சி உரிமையை நியாயப்படுத்துவதாகவும் இருந்து வந்துள்ளதைக் காணமுடிகிறது. அரசு தனித்தன்மை வாய்ந்த ஒன்று என்றும் அது தெய்வீகத்துடன் தொடர்புடையது என்றும் மக்கள் அனைவரும் அதற்கு கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்றும் பயபக்தியுடன் பரப்புரை செய்யப்பட்டு வந்துள்ளதையும் நாம் கண்டிருக்கின்றோம். மேலும் அரசு அனைத்து மக்களினதும் தேவைக்கும் நன்மைக்கும் உரிய நடுநிலையானதும் நீதியை பாதுகாக்கும் தூய்மையான நிறுவன வடிவமென்றும் கருத்துருவக்கட்டமைப்பு தொடர்ந்து பேணப்பட்டுக்கொண்டே வருகிறது .
ஆனால், அரசு நிறுவனத்தின் உள்ளார்ந்த ரீதியில் காணப்படும் அதன் பக்கச்சார்பையோ அல்லது அதன் பலாத்கார சாராம்சத்தையோ எவரும் கோட்பாட்டு ரீதியான கேள்விக்கு உட்படுத்தவில்லை
அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பாரிய கேள்வியை வரலாற்றில் முதற்தடவையாகக் கிளப்பி, அதற்கு கோட்பாடு ரீதியான உறுதிமிக்க பதிலை வழங்கியவர்கள் மகத்தான மேதைகளான கார்ள் மார்க்ஸும் பிரடெரிக் ஏங்கெல்ஸுமே. இவ்விருமேதைகளும் விஞ்ஞான அடிப்படையிலான வரலாற்றுப் பொருள் முதல்வாத ஆய்வின் மூலமாக அரசு பற்றிய தெளிவான கோட்பாட்டை முன்வைத்தனர்.
மனித குலத்தின் வரலாற்று வளர்ச்சியில் தனிச்சொத்துடமையின் தோற்றம் மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வினையும் வர்க்கங்களையும் உருவாக்கியது. இத்தகைய வர்க்கங்களிடையிலான முரண்பாடுகளும் போராட்டங்களும் எங்கெங்கும் மனித குலத்தின் வரலாறு வர்க்க போராட்டங்களின் வரலாறாகிக் கொண்டது.
இந்த வர்க்க முரண்பாட்டுச் சூழலில் (ஒருவர்க்கம் மற்றைய வர்க்கத்தை அடக்கியாள வேண்டிய தேவை ஏற்பட்டது. அத்தேவையை நிறைவு செய்வதற்கு ஒரு ‘கருவி அவசியமாகியது. அதுவே அரசு எனும் வடிவில் உருவாக்கப்பட்டது.
இதனையே, மார்க்சிசக் கோட்பாடு ஒருவர்க்கம் மற்றைய வர்க்கத்தை அடக்கியாளுவதற்கான கருவியே அரசு என்று நிறுவிக்காட்டியது. மேலும் அரசு வேறு அரசாங்கம் வேறானது என்பதையும் அரசு வடிவத்தின் பிரதானஅங்கம் பலாத்காரம்தான் என்பதையும் அது ஆளப்படும் வர்க்கத்தினருக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுவருவதையும் மார்க்சிசக் கோட்பாடு தெளிவுபடுத்திக் கோடிட்டுக் காட்டியது.
மார்க்சிய – லெனினிய – மாவோ சிந்தனையில் பொது உண்மைகள் எல்லாவற்றிலும் அரசைப் பற்றிய கோட்பாடே மிகவும் அடிப்படையானதாகும். மிகவும் முக்கியமான கோட்பாடுகளில் ஒன்றான இது முதலில் கார்ல் மார்க்ஸினால் முன்வைக்கப்பட்டது. சமுதாயத்தில் ஒரு புரட்சிகர மாற்றத்தை வெற்றிகரமாக ஏற்படுத்தி, சுரண்டலை முடிவிற்குக் கொண்டுவர வேண்டுமானால், ஒவ்வொரு புரட்சியாளனும் இதைக் கட்டாயமாகக் கிரகித்துக் கொள்ளவேண்டுமென பின்னர் லெனினும் மாவோம் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
“அரசு’ என்ற எண்ணத்தினால் நாம் என்ன விளங்கிக் கொள்கின்றோம் என்பதற்கு முதலில் வரைவிலக்கணம் கூறுவோம். ஆயுதப் படைகள் என்ற பிரதான உருவிலுள்ள அரசு இயந்திரத்தையே அரசாங்கம் என நாம் விளங்கிக்கொள்கின்றோம். நீதி துறை, சிறைச்சாலைகள், கொழுத்த சம்பளம் பெறும் அதிகாரத்துவம் ஆகியனவே அரசு இயந்திரத்தின் மற்றைய வடிவங்களாகும். இவற்றையெல்லாம் ஒன்று சேர்த்தே அரசு அல்லது அரசு இயந்திரம் எனக் கூறுகின்றோம்.
அரசு எவ்வாறு தோன்றியது? அதன் தன்மையென்ன? நினைவிற் கெட்டாத காலமாக அது இருந்துவந்ததா? இது வர்க்கப் போராட்டத்தில், பக்கம் சாராமல் சமுதாயத்திற்கு மேலேயுள்ள ஒரு நடுநிலைப் பொருளா? அல்லது அது சமுதாயத்தின் ஒரு சேவகனா? அரசின் குறிப்பான தன்மையை அறிந்து கொள்ளவேண்டுமானால், இவை நாம் கட்டாயமாக விடைகாண வேண்டிய கேள்விகளில் சிலவாகும்.
அரசின் அங்கங்களாக விளங்குவது நிலையான இராணுவமும் பொலீசுமாகும். இந்த அமைப்புக்கள் எப்போது தோன்றியதென்பதை பார்ப்போம். உலகில் முதலாளித்துவத்திற்கு மாறிய முதலாவது நாடாகிய இங்கிலாந்திலேயே இரண்டும் முதலிற் தோன்றின.
நோமண்டியிலிருந்து இங்கிலாந்திற்கு 3 வது வில்லியம் திரும்பியபின்னர் இங்கிலாந்தில் நிலையான இராணுவம் ஸ்தாபிக்கப்பட்டது. அதற்கு முன் உலகில் எந்தப் பகுதியிலாவது நிலையான இராணுவம் இருக்கவில்லை. அரசர்களும், பிரதானிகளும் யுத்தத்திற்குச் சென்றபோதெல்லாம் கூலிப் படையினரைத் திரட்டினர். யுத்தத்தின் முடிவில் படைவீரர்கள் தமது முன்னைய தொழிலுக்குத் திரும்பினர். இவ்வாறே இங்கிலாந்திற்கும் பிரான்சுக்கும் இடையேயான நூற்றாண்டு யுத்தம் அல்லது புனித யுத்தம் நடத்தப்பட்டது. படைக்கு ஆள் திரட்டும் அதிகாரி முரசுடன் சந்தைகளில் போர் வீரர்களைத் திரட்டும் காட்சிகளை திரைப்படம் பார்ப்பவர்கள் கண்டிருப்பார்கள். மூன்றாவது வில்லியத்திற்கு முந்திய காலத்தில் நிரந்தர இராணுவம் இல்லையென்பதை இது திட்டவட்டமாக நிரூபிக்கின்றது. இன்று நிலையான இராணுவம் இல்லாத நாடே கிடையாது.
அவ்வாறே பொலீஸ் படை இல்லாத நாடே இல்லை. அப்படியானால் எப்பொழுது இது முதன் முதலில் தோன்றியது? சென்ற நூற்றாண்டில் முன் அரைப் பகுதியில் பிற்காலத்தில் இங்கிலாந்தில்.
முன்னர் உலகில் பொலீஸ் படை இருக்கவில்லை என்றும் மூன்றாவது வில்லியத்திற்கு முன்னர் உலகில் நிலையான இராணுவம் இருக்கவில்லை எனவும் தெளிவாகக் காண்கின்றோம். நாம் இன்று காணும் அரசானது நினைவிற்கு எட்டாத காலத்திற்கு முன்னர் இருக்கவில்லை என்பதை இது தெளிவாக நிரூபிக்கின்றது.
இதைத் தெரிந்துகொண்ட பின்னர் சமுதாய ஆரம்பத்தின் முன் நாட்களை அல்லது குறைந்தது ஆரம்பகால மனித நாகரீகத்தை பின்னேக்கிப் பார்ப்போம். இன்றுவரை உலகம் புராதனப் பொது உடமை, அடிமை, நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ, சோசலிச சமுதாயங்கள் ஆகிய ஐந்து வகைச் சமுதாயங்களைக் கண்டிருக்கிறதென இயக்கவியல் சரித்திரம் நமக்குப் போதிக்கின்றது. நாகரிகத்தின் மிக ஆரம்பக் காலத்தில் புராதனப் பொது உடமைச் சமுதாயம் இருந்தது. உற்பத்திச் சாதனங்கள் சீராக வளர்ச்சி அடையாதிருந்த காலத்தில் இந்த அமைப்பு இருந்தது. வளர்ச்சியின் அந்தக்கட்டத்தில் மக்கள் பெரும்பாலும் காட்டு மிருகங்களை வேட்டையாடுதல், மீன் பிடித்தல் ஆகியவற்றிலேயே வாழ்ந்து வந்தனர். இதற்காக அவர்கள் உபயோகித்த உபகரணங்கள் அம்பு, வில்லு போன்ற புராதனமானவை. இவை யாவும் பொதுவில் உடமை கொண்டிருக்கப்பட்டது. இவை யாவும் எவராலும் செய்து கொள்ளக் கூடியவையாக இருந்ததால் உற்பத்திச் சாதனங்களைத் தனி நபர் உடமை கொள்ளும் நிலை ஏற்படவில்லை.
அதே நேரத்தில் சிறு உணவைப் பெற்றுக் கொள்வதற்குச் சகலரும் கூட்டாக உழைக்கவேண்டி இருந்தது. உதாரணத்திற்கு, பெண்கள் வீட்டு வேலைகளை கவனித்தபோது சகல ஆண்களும் காட்டு மிருகங்களை வேட்டையாடச் சென்றனர். இப்படி இருந்தும் இந்த வேட்டையாடுவோரின் கூட்டு உழைப்பு அந்த பூர்வீகக்குடியினர் சகலரும் உண்பதற்கு மட்டுமட்டான உணவையே கொடுத்தது. இது பெரும்பாலும் போதாதிருந்தது. இந்தச் சூழ்நிலைகளில் உற்பத்திச் சாதனங்களின் வளர்ச்சி மிக அடித்தளத்தில் இருந்தபோது மக்களை எதிர் எதிர்வர்க்கங்களாகப் பிரிக்கும் அடிப்படை ஏற்படவில்லை. தான் உண்பதற்கு வேண்டிய உணவை மட்டுமே உற்பத்தி செய்யத் கூடிய நிலையில் உள்ள ஒருவன் வேறு ஒரு சக மனிதனை அடிமைப்படுத்துவதில் எதுவித அர்த்தமுமில்லை. அன்று நிலவிய வர்க்கங்களற்ற சமுதாயத்திற்கு இதுதான் அடிப்படையாகும்.
சில குறிப்பிட்ட ஆறுகளில் மீன் பிடிக்கும் உரிமைக்காகவும், சில குறிப்பிட்ட காடுகளில் வேட்டையாடுவதற்கான உரிமைக்காகவும் வெவ்வேறு பூர்வீகக்குடிகளுக்கிடையே யுத்தங்கள் இடம்பெற்றன. அவ்வாறான யுத்தங்களில் தோல்வியுற்ற பூர்விகக் குடிமக்கள் சிறைப்பிடிக்கப்படவில்லை. அவர்கள் சிரச்சேதம் செய்யப்பட்டனர். இது காட்டுமிராணிடித்தனமானதாக எமக்குப் படக்கூடும். தலையை வெட்டிவிடுவது அதற்குச் சாப்பாடு போடும் தேவையை இல்லாமல் செய்துவிடுகிறதென்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ஒரு பிந்திய காலகட்டத்தில் உற்பத்திச் சாதனங்களின் வளர்ச்சியால் ஒரு மனிதன் தனக்குப் போதிய உணவை உற்பத்தி செய்யக் கூடிய நிலை ஏற்பட்டதோடு அல்லாமல் மற்றையோருக்கும் உற்பத்தி செய்யக்கூடிய நிலை ஏற்பட்டதுமே வர்க்கங்களாக சமுதாயத்தைப் பிரிப்பதற்கான அடிப்படை தோன்றும் கட்டத்தை அடைகின்றோம். இப்பொழுது தோற்கடிக்கப்பட்ட பூர்விகக் குடியினர் வாளுக்கிரையாக்கப்படுவதில்லை. செல்வத்தை உற்பத்தி செய்வதற்காக அவர்கள் அடிமைகளாக்கப்பட்டனர். அடிமையை வைத்திருப்போன் – அடிமை என்ற பிரபுத்துவத்திற்கு முந்திய அடிமைச் சமுதாயத்தின் மூலம் வர்க்கச் சமுதாயம் முதன் முதலாகத் தோன்றுகிறது.
உற்பத்திச் சாதனங்களின் வளர்ச்சிதான் புராதன பொதுஉடமைச் சமுதாயத்திலிருந்து அடிமைச் சமுதாயமாக மாறுவதற்கு ஏதுவாக இருந்தது என்பதை நாம் குறித்துக்கொள்வோம். ஒரு அடிமை தனக்கும் தனது எசமானுக்கும் வேண்டியதை உற்பத்தி செய்யக்கூடிய நிலைக்கு உற்பத்திச்சாதனங்கள் வளர்ச்சியடையும் வரை அடிமைத்தனத்திற்கான அடிப்படை தோன்றியிருக்கமுடியாது. ஒரு வர்க்க சமுதாயத்தின் வருகையோடு ஒரு வர்க்கம் மற்ற வர்க்கத்தை அடக்குவதற்கு ஒரு சாதனம் தேவைப்பட்டது. இதுதான் பிற்காலத்தில் அரசாங்கமாக வளர்ச்சியடைய இருந்தது.
வர்க்கங்களற்ற புராதன பொதுவுடைமைச் சமுதாயத்தில் அரசாங்க இயந்திரம் இருக்கவில்லை. அப்பொழுது வர்க்கங்களற்ற சமுதாயம் இருந்தமையால் ஒரு வர்க்கத்தை வேறோரு வர்க்கம் அடக்கி வைத்திருப்பதற்குத் தேவையான காரணம் ஏற்படாததேயாகும். அவ்வாறானால் ஒழுங்கு எவ்வாறு நிலை நாட்டப்பட்டது? ஒவ்வொரு பூர்வீகக்குடியும் தம்முள் ஒருவரைத் தலைவராக அல்லது முக்கியஸ்தராகத் தெரிவுசெய்தனர். பொதுவாக அவன் வேட்டையாடுவதற்கும், யுத்தத்திற்கும், அவர்களைத் தலைமைதாங்கும் உடல் வலிமை பெற்றவனாயிருந்தான். ஆனால், அவன் தனது அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கு அவனிடம் அரசாங்க இயந்திரமான ஓர் இராணுவத்தையோ அல்லது பொலீஸ் படையையோ கொண்டிருக்கவில்லை. சுயமாகவே மக்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்தனர். ஒவ்வொருவரும் அவனது சொல்லை ஏற்றுக் கொண்டனர். ஒரு பூர்வீகக்குடியில் தலைவனுக்குக் கிடைத்த மனப்பூர்வமான மரியாதையும் கீழ்ப்படிவதும், முதலாளித்துவ சமுதாயத்தில் எந்தவொரு சக்திவாய்ந்த தலைவனுக்கும் கிடைத்ததில்லை.
புராதான பொதுவுடைமைச் சமுதாயத்தின் கால கட்டத்தில் அரசாங்க இயந்திரத்தைச் சிறிதளவாவது ஒத்ததாக ஏதும் இருக்கவில்லையென்பது மிகவும் தெளிவாகின்றது. எதிர் எதிர் வர்க்கங்கள் ஒரு வர்க்கத்தை ஒரு வர்க்கம் தனக்குக் கீழ்க் கொண்டுவரும் நிலைக்கு வளர்ச்சியடையும்போதே ஓர் அடக்குமுறை அரசு இயந்திரத்தின் தேவை ஏற்படுகின்றது. அவ்வாறான முதற் சமுதாயம் அடிமைச் சமுதாயமாகும். அதன் சிறந்த உதாரணங்களை கிரேக்கத்திலும் ரோம சாம்ராஜ்யத்தின் காலப்பகுதியிலும் காணலாம். இந்த சமுதாயம் அடிமையை வைத்திருப்போன் – அடிமை என்ற எதிர் எதிர்வர்க்கங்களாகப் பிளவுபட்டிருந்தது. வல்லமைமிக்க ரோம சாம்ராஜ்யத்திற்கு எதிராக ஸ்பார்ட்டகஸ் தலைமை தாங்கிய மிகப் பிரபல்யம் வாய்ந்த கிளர்ச்சிகள் உட்பட பல அடிமைக் கிளர்ச்சிகளை இந்தச் சமுதாயம் கண்டது.
இக்கட்டத்தில் அடக்குமுறை இயந்திரம் பெரிய அளவில் வளர்ச்சியடையவில்லை. அடிமைகள் மிகக் கடுமையான கசையடி மூலமும், பிரமாண்டமான சுதந்திர மனிதர்களின் படையுடனும் கோரமாக அடக்கியாளப்பட்டனர். ஆனால், வர்க்க முரண்பாடுகள் கூர்மையடைந்து சமுதாயம் அடுத்த கட்டமான நில பிரபுத்துவத்திற்கு வளர்ச்சியடைந்ததும் மேலும் மோசமான அடக்குமுறை அரசு இயந்திரத்தின் தேவை உணரப்பட்டது. நிலையான இராணுவம் ஸ்தாபிக்கப்பட்டது. ஒரு நீதித் துறையும் சிறைச்சாலைகளும் தோன்றின. சிறிது சிறிதாக அரசு இயந்திரம் வளர்ந்து வர்க்க முரண்பாடு மிக உச்சக் கட்டத்தில் கூர்மையடைந்துள்ள முதலாளித்துவ சமுதாயத்தில் உயர் இராணுவ மயமாக்கப்பட்ட இன்றைய அரசாங்கம் தோன்றியது.
இதிலிருந்து வர்க்க முரண்பாடுகளின் வளர்ச்சிப் போக்கின் விளைவுகளால் அரசாங்கம் தோன்றியது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.
மார்க்ஸ் விளக்கியது போன்று அரசாங்கமென்றால் ஒருவர்க்கும் வேறு ஒரு வர்க்கத்தை அடக்குவதற்கான ஒரு சாதனமாகும். அது வர்க்கங்களுக்கு மேலே, சமுதாயத்திற்கு மேலே உள்ள ஒரு நடுநிலை அமைப்பல்ல. சுரண்டும் வர்க்கங்கள், சுரண்டப்படும் வர்க்கங்களை அடிமைத்தனமாக வைத்திருப்பதற்கான ஓர் அடக்குமுறைச் சாதனமே அரசாங்கமாகும். சுரண்டும் வர்க்கங்கள், சுரண்டப்படும் வர்க்கங்களை கீழே வைத்திருப்பதற்காகப் படிப்படியாகக் கட்டப்பட்ட சாதனமே அது.
ஓர் ஒடுக்குமுறை முதலாளித்துவ அரசாங்க இயந்திரம் இல்லாமல் சுரண்டல் ஒரு நிமிடத்திற்குமேல் நிலைக்காதென்பது நிச்சயமாகத் தெளிவாகின்றது. ஆயுதப் படையினரதும், பொலீஸ் படையினரதும் கரங்களில் துப்பாக்கியில்லாவிட்டால் சுரண்டும் வர்க்கங்கள் சுரண்டப்படுவோரைக் கீழே போட்டு மிதிக்க முடியாது. ஒரு வேலைநிறுத்தத்தில் பங்குபற்றிய எவருக்கும் இது தெரியும். ஒரு வேலைநிறுத்தம் ஆரம்பமானவுடன் முதலாளி தொலைபேசியை எடுத்ததுதான் தாமதம் வேலைநிறுத்தம் நடைபெறும் தொழிற்சாலையை நோக்கி ஒரு வேன் நிறையப் பொலீஸ்காரர்கள் வருவார்கள். அவர்கள் முதலாளியின் உயிரையும், உடமையையும் பாதுகாக்க வந்துள்ளார்கள். அத்துடன் அவர்கள் ஆயுதந்தாங்கியவர்களாக வந்திருக்கின்றார்கள். அவர்களின் கரங்களில் உள்ள துப்பாக்கிகளே முதலாளியையும், அவனது வர்க்கத்தையும் பாதுகாக்கின்றது. அந்தத் துப்பாக்கிகள் இல்லாவிட்டால் தொழிலாளர்கள் சுரண்டலுக்கு ஒரு நாள்கூட இடங்கொடுக்கமாட்டார்கள். எவ்வாறாயினும், பெரும்பாலான தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் முதலாளிகளுக்கு நூறுக்கு ஒன்று என்ற விகிதாசாரத்தில் இருக்கிறார்கள். இந்த நிலைமைகளில் எவ்வாறு அவர்களால் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் உள்ளவர்களைப் பலவந்தப்படுத்திச் சுரண்ட முடிகின்றது. அவர்களின் காவல் நாய்களான இராணுவம், பொலீஸின் கரங்களில் உள்ள துப்பாக்கிகளின் சக்தியே அது. அதனாலேயே தோழர் மாசேதுங், அரசியல் அதிகாரம் துப்பாக்கிக் குழலிலிருந்து பிறக்கின்றது என்பதை ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் உணர்ந்துகொள்ள வேண்டும் என நமக்குக் கற்றுத்தந்தது நூறுவீதம் சரியாகின்றது. அரசாங்கத்தைப் பற்றிய மார்க்சிசக் கோட்பாட்டை இது இரத்தினச் சுருக்கமாகத் தருகின்றது. மார்க்சிய – லெனினியத்தின் சாரம் அதுவே.
இந்தக் துப்பாக்கிகள் கைமாறும் போதே, சுரண்டப்பட்ட வர்க்கங்கள் புரட்சிகரப் பலாத்காரத்தினால் இந்தக் துப்பாக்கிகளைப் பறித்துத் தொழிலாளர்களினதும் அவர்களினது நேச அணிகளினதும் கைகளில் அவற்றை ஒப்படைக்கும்போதே அவர்கள் தம்மை விடுதலை செய்து கொள்வார்கள். வேறு எந்த மார்க்கமும் இல்லை. மற்றவை யாவும் தொழிலாள வர்க்கத்தை ஏமாற்றும் ஒரு திட்டமிட்ட முயற்சி அல்லது போலியாகும்.
இந்த உண்மையை மறைப்பதற்கும், மக்களைக் குழம்பச் செய்து அவர்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவுமே முதலாளிகளும் மற்றைய பிற்போக்குச்சக்திகளும் பாராளுமன்றம் என்ற ஏமாற்று வித்தையைக் கண்டுபிடித்தனர். பாராளுமன்றம் வெறுமனே மக்களை ஏமாற்ற மட்டுமே தவிர வேறொன்றும் இல்லை. அது மூலதனத்தின் வெளிப்படையான சர்வதிகாரத்தை மறைப்பதற்கான ஒரு திரை, ஒரு அணிகலனுமாகும். அது மக்களை மடையர்களாக்குவதற்கும், பிளவு படுத்துவதற்கும், பாராளுமன்றம் மூலம் சோசலிசத்தை அடையலாம் என்ற மாயையைப் பரப்புவதன் மூலம் அவர்களின் வர்க்க உணர்வுகளை மழுங்கடிப்பதற்கும், ஆயுதப் படையிற்தான் உண்மையான அதிகாரம் இருக்கிறதென்பதை மக்களிடமிருந்து திசைதிருப்புவதற்கும் முயற்சிக்கின்றது. ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்குப் பதில் வெறும் சொற்களால் போராட்டம் நடத்தும் மாற்று யோசனையை கூற முயற்சிக்கின்றது
முதலாளித்துவப் பராரளுமன்ற ஜனநாயகத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட அரசாங்க மாற்றங்கள் பொருளாதாரக் கட்டுக்கோப்பில் அல்லது அதைப் பாதுகாக்கின்ற முதலாளித்துவ அரசாங்க இயந்திரத்திலோ எந்தவித அடிப்படைமாற்றமெதுவையும் கொண்டுவரவில்லை.
அதனால்தான் ஒவ்வொரு புரட்சியாளனும் இப்போதுள்ள ஏகாதிபத்திய – நில பிரபுத்துவ – பெரும் முதலாளித்துவ பொருளாதாரக் கட்டுக்கோப்பை நொருக்காமலும், அத்துடன் அதன் காவல்நாயாக விளங்கும் ஒடுக்குமுறை அரசாங்க இயந்திரத்தைப் பலாத்காரத்தினால் உடைக்காமலும், முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயக நாடகத்தின் மூலம் பதவிக்கு வரும் எந்த அரசாங்கமும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கமாட்டாது என்ற உண்மையை கவனத்தில் கொள்ளவேண்டும்