இரண்டு செண்ட் நிலம்கூட இல்லை. இதில் களையெடுத்து விவசாயம் செய்து எத்தனை பேருக்கு பசியாற்றப் போகிறீர்கள்?ரஷ்ய, சீன கட்சிகள் போல் பலம்வாய்ந்த கட்சி என்ற நினைப்போ. ஒரு நூறுபேர்கூட இல்லாத ஒரு சிறிய குழு களையெடுக்கிறோம், களையெடுக்கிறோம் என்று சொல்லி மேலும் மேலும் சிறு குழுவாக சிறுத்துக்கொண்டிருப்பதை பார்க்க மறுக்கிறார்களே. இந்த குழுக்களால் நமது நாட்டில் புரட்சி நடத்திட முடியுமா?ரஷ்யாவில் லெனின் செய்தது போல குழுக்களை ஒன்றிணைத்து ஒன்றுபட்ட கட்சியை கட்டாமல் இங்கு புரட்சியை நடத்திட முடியுமா?நாம் ஒன்றுபடுவதற்கு முன்பு தெளிவான எல்லைக்கோட்டை வகுக்க வேண்டும் என்று சொல்லி, லெனின் சித்தாந்தப் பணியில் ஈடுபட்டு, இஸ்கரா என்ற பத்திரிக்கை நடத்தி மார்க்சிய குழுக்களிடையே பிரச்சாரம் செய்து ஒன்றுபட்ட கட்சியைக் கட்டினார். இந்த வழியில் நமது நாட்டில் மார்க்சியத்திற்கும் மார்க்சியத்திற்கு எதிரானதற்கும் ஒரு எல்லைக்கோடும், மார்க்சியத்திற்கும் மார்க்சிய விலகலுக்கும் இடையிலான எல்லைக்கோடும் ஆகிய இரண்டு எல்லைக்கோட்டை வகுப்பதற்கான எல்லைக்கோட்டை வகுக்கும் சித்தாந்தப் பணியை செய்திடாமல் களையெடுக்கும் வேலையையே தொழிலாக செய்துகொண்டிருப்பவர்களால் ஒருபோதும் நமது நாட்டில் புரட்சியை நடத்துவதற்கான கட்சியை கட்ட முடியாது. கட்சிக்குள் மாறுபட்ட கருத்தை யார் வைத்தாலும் அது உண்மையிலேயே தவறான கருத்தாக இருந்தால் விமர்சனம், சுயவிமர்சனம் மூலம் தீர்க்க வேண்டும். தோழர்கள் யாரும் தவறு செய்திருந்தால் அதனை ஓர் சீர்செய் இயக்கத்தின் மூலம் களைய வேண்டும். அதன் மூலம் மட்டுமே அந்த தவறுகளை வரும்காலத்தில் பிறரும் செய்யாமல் தவிர்க்க முடியும்.கட்சிக்குள் தலைவர்களைப் பார்த்து கேள்வி கேட்டுவிட்டாலே அவரை பகைவர் போல் கருதி தூக்கி எறிந்துகொண்டே இருந்தால் கட்சி ஒருபோதும் வளராது. கட்சிக்கு புதிய சக்திகள் யாரும் வரமாட்டார்கள். மேலும் முறையற்ற முறையில் தோழர்களை வெளியேற்றினால் இதே முறையில் இந்த தலைவர்களும் பின்னால் வெளியேற்றப்படுவார்கள். இதற்கு முன் உதாரணம் மா.லெ. அமைப்பில் உள்ளது.